+2 மாணவர்கள் நேரடியாக எம்எஸ்சி படிக்கலாம்!
by தனசேகரன்
பிளஸ் டூ படித்த மாணவர்கள் உதவித் தொகையுடன் புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேரலாம். இந்தப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நெஸ்ட் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.
அறிவியல் பாடப்பிரிவுகளில் ஆர்வம் மிக்க மாணவர்களை பிளஸ் டூ நிலையிலேயே அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் புவனேஸ்வரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், மும்பையில் உள்ள சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகளில் சேரத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேர விரும்பும் மாணவர்களும் இந்த நெஸ்ட் நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்கள் பட்டியிலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணுசக்தித் துறை சார்பில் இயங்கி வரும் கல்வி நிலையம் நிசார் என்று அழைக்கப்படும் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச், புவனேஸ்வரத்தில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசிக்ஸ் வளாகத்தில் இயங்கி வருகிறது. 2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் இது. அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் ஹோமி பாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கும். பயாலஜிக்கல் சயின்ஸ், கெமிக்கல் சயின்சஸ், மேத்தமேட்டிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்எஸ்சி பட்டப் படிப்பைப் படிக்கலாம். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஹோமிபாபா நேஷனல் இன்ஸ்டிட்யூட் பட்டங்களை வழங்கும். முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவாக அடிப்படை அறிவியல் விஷயங்கள் கற்றுத்தரப்படும். முதல் ஆண்டில் மாணவர்களின் திறமை மற்றும் விருப்பத்தைப் பொருத்து மாணவர்களுக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேசமயம், ஒவ்வொரு செமஸ்டரிலும் தங்களது துறைக்கு வெளியே ஒரு பாடப்பிரிவை எடுத்துப்படிக்க வேண்டியதிருக்கும். அத்துடன் ஒரு கலைப்பாடப்பிரிவையும் எடுத்துப் படிக்க வேண்டியதிருக்கும். இங்கு படிக்கச் சேரும் மாணவர்களுக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை வழங்கும் இன்ஸ்பையர் ஃபெல்லோஷிப் கிடைக்கும். இந்த ஃபெல்லோஷிப் பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை கிடைக்கும். கோடைகாலத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் ஆய்வகங்களிலும் புராஜக்ட் செய்வதற்கும் உதவிகள் கிடைக்கும்.
மும்பையில் உள்ள சிபிஎஸ் என்று அழைக்கப்படும் சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் கல்வி நிலையம், அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சிக் கல்வி மையம் ஆகும். மும்பை பல்கலைக்கழகத்தின் வித்யாநகரி வளாகத்தில் செயல்படும் இந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மும்பை பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். இங்கு பயாலஜிக்கல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், மேத்தமேட்டிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிக்கலாம். முதல் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுவானதாகவே பாடங்கள் இருக்கும். இரண்டாம் ஆண்டில் இருந்துதான் மாணவர்களுக்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளில் பாடங்கள் தொடங்கும். இந்தப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கேற்ற வகையில் ஊக்கம் அளிக்கப்படும். இந்தப் படிப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும். புத்தகங்கள், ஸ்டேஷனரி, ஆய்விதழ்கள் வழங்குவதற்கும் உதவித் தொகை அளிக்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்கள் கல்வி நிறுவனத்தின் தங்கும் விடுதியில் தங்கிப்படிக்க வேண்டும் என்பது விதி. இங்குள்ள தங்கும் விடுதியில் தங்கும் வசதிக்காக செமஸ்ட்டருக்குக் கட்டணம் ரூ.100 மட்டுமே. அடையாளக் கட்டணம் போல இந்தக் குறைந்த தொகை தங்கும் விடுதிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திறமையான மாணவர்களுக்குப் படிப்பை முடித்ததும் அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி நிலையங்களில் சேர்ந்து பணிபுரியவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
அட்மிஷன் எப்படி நடைபெறுகிறது?
இந்தக் கல்வி நிலையங்களில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த எம்எஸ்சி படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நெஸ்ட் (National Entrance Screening Test - NEST) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வு மே 27ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்தில் இருக்கும். அப்ஜெக்ட்டிவ் முறையில் கேட்கப்படும், இந்த வினாத்தாளில் ஐந்து பிரிவுகள் இருக்கும். இதில் பொதுக் கேள்விகள் அனைவருக்கும் பொதுவானவை. உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய நான்கு பிரிவுகளில் ஏதாவது மூன்று பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து அந்த வினாக்களுக்குப் பதில் அளிக்க வேண்டியதிருக்கும். நெஸ்ட் நுழைவுத் தேர்வுப் பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு வினாப் பகுதிக்கு என தனிப் பாடத்திட்டம் எதுவும் கிடையாது. வானியல், உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மாணவர்கள் தெரிந்து இருக்கிறார்களா என்பது சோதனை செய்யப்படும்.
என்ன தகுதி இருக்க வேண்டும்?
இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் உடல் ஊனமுற்ற மாணவர்களும் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். 2010 அல்லது 2011ம் ஆண்டில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 2012ம் ஆண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். 1987ம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் சலுகை உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த நுழைவுத் தேர்வு எழுத விரும்பும் பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணம் ரூ.300. விண்ணப்பக் கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் ஆகவோ அல்லது எலெக்ட்ரானிக் டிரான்ஸ்பர் முறையிலோ அனுப்பலாம். விண்ணப்பங்களைக் கோரி வரும் மனுக்கள் பிப்ரவரி 13ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 13ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கும் மாணவர்களும் இதே தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விவரங்களுக்கு: www.nestexam.in